கிறிஸ்மஸ்தீவில் உள்ள முகாமில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குடும்பத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய பிரதமரை வலியுறுத்தி போராடிவரும் ‘ஹோம் டு பிலோ’ அமைப்பு (Home to Bilo) அவுஸ்திரேலியாவில் முக்கிய இடங்களில் 3 பிரச்சார பதாகைகளை அமைக்கவுள்ளது. இந்தக் குடும்பத்தை விடுவிக்குமாறு பிரதமரைக் கோரும் பதாகைகள் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் நிறுவப்படவுள்ளன. பிரியா மற்றும் நடேஸ் முருகப்பன் ஆகியோர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்றனர். அவர்களின் வதிவட அனுமதி கடந்த 2018 மார்ச் மாதம் காலாவதியானது. இதனைத் தொடர்ந்து அவா்கள் தங்கள் இரண்டு பெண் குழந்தைகளான கோபிகா மற்றும் தார்னிகா ஆகியோருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குடும்பத்தை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டபோதும் சட்டப் போராட்டங்களை அடுத்து நீதிமன்ற உத்தரவால் அந்த முயற்சி தடைப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த நடேஸ் தான் இலங்கைக்குத் திரும்பப்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் சித்திரவதை மற்றும் நீதித்துறைக்கு புறம்பான கொலைகள் குறித்து நம்பத்தகுந்த கவலைகள் இருப்பதாக தமிழ் அகதிகள் குடும்பம் சார்பில் சட்டத்தரணிகள் வாதங்களை முன்வைத்துள்ளனர்.
இருந்தபோதிலும் இந்தக் குடும்பம் அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து பெறுவதற்கான வரையறைகளை பூர்த்தி செய்யவில்லை என அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் தமிழ் அகதிகள் குடும்பத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய பிரதமரை வலியுறுத்தி போராடிவரும் ‘ஹோம் டு பிலோ’ அமைப்பின் பிரச்சார வலைத்தளம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா